1.1 அசோகா ஹேமாவின் உள்ளமுதே கண்ணமம்மா!

உள்ளமுதே கண்ணம்மா !!!

 

உள்ளமுதம் 1.1 

 

“தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;                                     

வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!”

தூரத்தில்  எங்கோ கைப்பேசியில் பாரதியின் பாடல் ஒலிக்க அவனும் உடன் பாடிக் கொண்டிருந்தான். அந்த அறையில் அவனோடு இருந்தவள் மனதிலும் அவனைப் போலவே எல்லையில்லா இன்பம் கொட்டிக் கிடந்தது.

ஒளியும் இருளும் அற்ற மிதமான தென்றல் வீசும் அந்திவேளை. சாளரத்தின் தடுப்புகளைத் தாண்டி குளிர்ந்த காற்று இருவரின் மேனியையும் தீண்டி குளிர்விக்க முனைந்தது.

ஊனும் உயிரும் அவர்களின் உணர்வுகளும் ஒன்றென இணைந்து ஒன்றோடொன்று ஒன்றி இருக்க, குளிர் தென்றலிலும் வெப்பம் கூட்டவே செய்தது. இருவருக்கும் உள்ளிருக்கும் அன்பு மட்டுமே சுவாசமாகி உள்ளும் புறமும் உவகையாய் சூழ்ந்திருந்தது.

“என் உள்ளமுதம்டி கண்ணம்மா நீ” மெல்ல மௌனம் கலைக்கிறான் அவன்.

“ஹ்ம்ம்” வார்த்தைகளற்ற ஒலி மட்டுமே வர, அவள் புறம் திரும்பியவன் கையணைப்பில் இருந்தவளின் அழகிய முகம் கண்டான்.

 

கலைந்த கூந்தல் நெற்றி கடந்து கன்னத்திலும் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்க, செம்மை ஏறிச் சிவந்திருக்கும் வதனம் மேலும் அவனைப் பித்தனாக்கியது.

ஆம் அவன் அவளின் காதல் பித்தன்.

அந்த அறையின் சாளரத்தின் வழி தெரிந்த இருள் சூழா முன்னிரவின் தொடுவானத்தின் செம்மை எல்லாம் அவளின் செம்பவள வதனத்தில் தேடும் காதல் பித்தன்.

“கண்ணம்மா” மீண்டும் அழைத்தான்.

“ஹ்ம்ம், சொல்லு பாரதி” இதழ் விரியாமல் வார்த்தைகளை உதிர்த்தாள் அவள்.

“இப்படி ஒரு நாள் நம்ம வாழ்க்கையில், நம்ம எதிர் பார்க்காதது, சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கேன் டீ” சொன்னவனின் மகிழ்ச்சி அவனின் குரலில் தெரிய, அவன் கை வளைவில் இருந்தவளின் ஈர முத்தம் அவனின் கன்னம் தொட்டது.

“என்னடி?” கேட்டவனின் குரல் அவளைச் சேர்ந்தாலும், அவன் கண்கள் இன்னும் முத்தம் கேட்டு எதிர்பார்ப்பாய் மூடியே இருந்தது.

“இதுவும் கூட நம்ம எதிர்பார்க்காதது தான்,” என்று அவர்களின் நெருக்கத்தை கைகளின் அணைப்பைக் கூட்டி  விளக்கியவள் “எதிர்பாராததை எதிர்பார்க்கிறது தானே வாழ்க்கை.” என்றாள் அவனின் முகம் பார்த்து.

“ஒரே ஒரு முத்தம், அந்த ஒற்றை முத்தம் தந்த இதமும் ஈரமும் தான் நம்ம வாழ்க்கை கண்ணம்மா” என்றவன் குரலில் காதல் மீகிட,

“அந்த ஒற்றை முத்தமா? இல்ல ஒன்னு ஒன்னுன்னு சொல்லியே நீ குடுக்குற ஓராயிரம் முத்தத்தோடா ஈரமான்னு நீயே யோசிச்சு சொல்லு பாரதி.” மென் குரலில் அவனைப் போலவே பிதற்றினாள்.

“இந்த ஓராயிரம் முத்தத்திற்கான உரிமை அந்த ஒத்த முத்தத்தோட சந்தத்தில் வந்த சொந்தம்டி கண்ணம்மா.” சொன்னவன் அவனின் இதழ் கொண்டு பாடிய முத்த சந்தத்தில் காதல் பொழுதுகள் மீண்டும் ஒருமுறை களவாடப் பட்டன.

முத்தத்தால் தன்னவளைக் களவாடியவன் நெற்றி முத்தமிட்டு மெல்ல அவளின் விழி சொல்லும் உணர்வுகள் படிக்க, அவளுக்கோ அவர்கள் உறவின் ஆரம்ப கால நினைவுகள்.

அவன் அவளின் தேகம் தீண்டும் நேரமெல்லாம் கூச்சத்தால் அவளிடம் கூச்சல்கள் கூடிப் போக அவன் அப்போதெல்லாம் படும்பாடு அவளுக்கு நினைவுக்கு வர அவளின் புன்னகை நீண்டது.

அவனுக்கும் அது புரிய இதழோரம் பூத்த சிறு புன்னகையோடு  “சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் கண்ணம்மா” என்றான் கேலியாய்.

“என்னடா? இப்ப எதுக்குத் தேவை இல்லாம இந்தப் பழமொழி?” கேட்டவள் விழிகளும் கேள்வியாய் இமை தூக்கி அவளவனின் விழிகளுடன் கலக்க,

“ஹ்ம்ம், அதுவா கண்ணம்மா நீ இப்போ சத்தம் போடாம என் கைக்குள்ள இருக்க, அதுவும் மெய்யோடு மெய்யா என்னோட ஒட்டி ஒரசிட்டு, முக்கியமா துளி கூட சத்தம் போடாம. நீயும்.. ” என்றவன் தொடர்ந்து ஏதோ சொல்ல அவனின் வார்த்தைகள் எல்லாம் சத்தமில்லாமல் அவளின் உள்ளங்கையினுள் அடங்கியது.

அவள் அறிவாளே அவன் சொல்ல வருவதன் பொருளை. அவள் சத்தமிட்ட பொழுதுகளும், அன்று அவன் முத்தமிட்டு முத்தமிட்டு முகிழ்த்திய மோகனங்களும் அவளின் நினைவில் வந்து நனைத்தது.

அவன் சொல்லிய ‘சத்தம் போடாம’ எனும் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அவளின் வெட்கம் சூழ்ந்த முகத்தை மறைக்க அவனின் மார்பிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

நிமிடங்கள் கடக்க, உள்ளங்கைகளில் அவள் அடக்கிய அவனின் வார்த்தைகள் மறைந்து மீண்டும் அவனின் முத்தத்தின் சத்தம் அந்த அறை முழுவதும் நிறைய செவ்வந்தி வான மயக்கம் இங்கு அவர்களுக்குள்ளும்.

அந்த மயக்கத்தில் மொத்தமாக முகத்தில் வெந்நீர் கொட்டியது போல அவனின் உறக்கமும் சட்டெனக் கலைந்தது. அவளுக்கும் இதே நிலைதான் என அவன் மனம் அடித்துச் சொல்லியது.

நாற்பது மைல்கள் தொலைவில் இருக்கும், தூக்கம் தொலைத்த இரு உள்ளங்களுக்கும் தாங்கள் கண்ட அந்த நிகழ்வு கனவா இல்லை நினைவா என பிரித்தறிய முடியாத குழப்பமான விடிகாலைப் பொழுது.

தூக்கத்தைக் கலைக்கும் இந்தக் கனவு தந்த தாக்கம் அவர்களின் இழப்பை இன்னும் பெரிதாய் காட்ட அழகிய அந்த விடியலின் கூதல் கூட காந்தலாய் தகித்தது.

இன்றைய நாளின் ஆரம்பமே காந்தலாய் இருக்க முடிவு மட்டும் கனியவா போகிறது? அதுவும்கூட கசப்பைக் கூட்டி கண்ணீரில் அல்லவா புதைக்கும்.

இதெல்லாம் அறிவானா அவன்? அரிவைகுத் தெரியுமோ? காலம் சொல்லும் இருவருக்கும்.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரம் முழுவதும் இன்னும் இருள் விலகாத காலைப் பொழுதில் உறங்கிக் கொண்டிருக்க நீண்ட நெடிய அந்த உருவம்  காரிருளில் தன் மகிழுந்தின் அருகில் வந்து நின்றது.

கண்கள் இரண்டு மட்டுமே வெளியே தெரிய குளிருக்காக உடலும் முகமும் கவசம் அணிந்து போல குளிருக்கான பிரத்யேக ஆடைகள் கொண்டு தன்னை மறைத்திருந்தான் அவன்.

அந்த விடியலில் அவன் கண்களில் தெரியும் சிவப்பு கோபமா இல்லை காலை விடியும் முன்பே வந்த கனவிலோ இல்லை அதன் நினைவில் வந்த நிகழ்வுகளினாலா என்பது அவனுக்கும் விளங்கவில்லை.

ஆனால் அந்த நினைவுகளின் தாக்கம் அவனவளின் மேல் கொண்ட காதலையும் அதன் பொருட்டு அவன் கொண்ட கோபத்தையும் பல மடங்காகப் பெருக்கியது.

தான் என்ன தவறு செய்தோம் என்று பலமுறை யோசித்தும் எங்கும் அவனது செயல்கள் அவனுக்குத் தவறாகவே படவே இல்லை. அப்படி தவறென்று நினைக்காத என்றோ நடந்து முடிந்த நிகழ்வுகளைத் திருத்தும் வழி மட்டும் அவன் எங்கனம் அறிவான்?

அவனது இதயத்தின் இறுக்கம் கண்களில் சிவப்பேற்ற கைகள் தன்போல் கண்ணாடியில் உறைந்திருக்கும் பனியைச் சுத்தம் செய்யத் தொடங்கியது.

பனி விலகி குளிர் பரவி கைகள் உறைய அவன் நினைவுகளோ பல ஆண்டுகளுக்கு முன் பயணித்தது.  அவளின் முன் முதல் முறை வளர்ந்த ஆண் மகனாய் அவனும் உறைந்து நின்றது நினைவில் நிழலாடியது.  நினைவுகள் நெஞ்சில் நின்றாட உதடுகள் ‘என் கண்ணம்மா’ என சொல்லிக் கொண்டது.

அவளின் கோபமோ இல்லை இந்தப் பிரிவோ என்றும் நிரந்தரமில்லை எனும் உண்மை தெரிந்தாலும் விடுகதையின் விடை அறியாத கோபம் அவனின் கைகளில் பரவி  அதன் வேகத்தைக் கூட்டியது.

அவனின் கண்ணம்மா நினைவு வர, மெல்லக் கண்கள் மூடி அவளின் குரலை இதயத்தின் சுவர்களிலெல்லாம் எதிரொலிக்க விட்டான்.

அவன்? அவன்? யார் இவன்? அதுவும் நீண்டு வளர்ந்தவன். அவன் சுசீந்திரன். குடும்பத்தில் அனைவருக்கும் சுசி. ஆனால் அவளுக்கு மட்டுமே அவன் ‘பாரதி’. காதல் கூடும் நேரங்களில் ‘கவி பாரதி’. காமம் கூடி பிதற்றுகையில் அவன் அவளின் காதல் பாரதி.

சுசீந்திரனின் குரல்  பாரதியின் கம்பீரக் குரல் இல்லை என்றாலும் யேசுதாஸின் காந்தக் குரலால் பாரதியின் பாடல்களுக்கு உயிர் தரும் கலை அறிந்தவன்.

பாடல் கற்றவன் என்பதை விட பாரதியின் பாடல்களைக் கற்றவன் என்பதில் தான் அவனுக்குப் பெருமை.

அவளை முதன் முதலில் கண்ட நாட்கள் தொட்டு இரு துருவமாய் இருந்தவர்களை இணைத்தது இந்த பாரதியின் வரிகள் தானே.

அவளை நினைத்ததும் அவளின் தேவை அவனுள் கூடிப் போக கட்டி அணைக்கவில்லை என்றாலும் கடிந்து கொள்ளவேனும் தினமும் அவளின் கண்ணம்மா வேண்டும் என்பது மட்டும் அவனுக்கு தெளிவாய் தெரிந்து போனது.

நினைத்தவன் மெல்ல அவனின் மகிழுந்தைப் பார்க்க பனி விலகி செங்குருதி நிறம் அந்த இருளிலும் பளபளக்க அவனின் ஜாகுவார் அன்றைய பயணத்திற்கு தயாரானது.

மான்செஸ்டர் நோக்கிப் போகும் இந்தப் பயணம் முழுவதும் சுசியின் நினைவில் அவனோடு சேர்ந்து பணிக்கும் இளையராஜாவிற்கு இன்று ஏனோ ஓய்வளித்துவிட்டு ரஹ்மானின் ராகங்களோடு பயணித்தான்.

மான்செஸ்டரில் தன் வேலையை மாற்றி மாதங்கள் கடந்தும் இன்னும் அவன் ஜாகை மட்டும் லிவெர்பூலில் தான். மாற்றும் எண்ணம் இன்று வரை ஏனோ வரவில்லை.

ஏன் மாற வேண்டும்? அவனுக்காகவே அங்கு வீடும் அதில் காதலாய் அவனின் கண்ணம்மாவும் இருக்கையில்.  நினைத்த நிமிடமே அவனின் இதழ்கள் சற்றே நீண்டு பின் மெல்ல அப்படியே நிலைத்தது.

error: Content is protected !!
Scroll to Top