வேக வேகமாக விசாலாட்சிக்கு அழைத்து, செய்தியை புயல் வேகத்தில் சொல்லி முடித்தாள் ராகவி.
அவ்வளவுதான். எப்போது நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த மொத்த குடும்பமும், ஒரு நொடியை கூட வீணாக்காமல் துரிதமாகக் காரியத்தில் இறங்கி இருந்தனர். மூன்றே நாட்களில் தேதியை முடிவு செய்திருந்தனர்.
இரண்டே வாரத்தில் திருமணம் என்று முடிவாகி எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்க, இன்று மணமகனே திருமணத்தை நிறுத்த சொல்லவும், கலங்கி போனார்கள் ராகவியும், உதயும்.
“உதய், இவன் என்ன இப்படியிருக்கான்?” ஏதோ யோசனையுடன், எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ராகவனைக் கைக் காட்டி ராகவி கேட்க,
“அவன்கிட்ட நான் பேசுறேன். நீ தேவையில்லாம டென்ஷன் ஏத்திக்காத பட்டே” அவளின் கன்னம் பற்றி உதய் சொல்ல, மெல்ல தலையசைத்து அங்கிருந்து எழுந்துச் சென்றாள் ராகவி.
போகும் முன் ராகவனின் தோளைப் பற்றி, “நீ என்ன முடிவு எடுத்தாலும், நான்.. உன் கூடவே தான் இருப்பேன் ராகவ். ஐ வில் ஆல்வேஸ் சப்போர்ட் யூ, நோ மேட்டர் வாட் ஹாப்பென்ஸ். மனசுல வச்சுக்கோ” என்று அவள் விலகி நடக்க, போகும் அவளையே பெருமூச்சுடன் பார்த்திருந்தான் ராகவன்.
“மதுமிதாக்கு ராகவி மேல கோபமா ராகவ்? உங்க சண்டைக்குக் காரணம் நாங்களா?” என்று அவனையும் சேர்த்துக் கொண்டு உதய் கேட்க, ராகவன் குனிந்த தலை நிமிரவில்லை.
மெதுவாக நகர்ந்து ராகவனுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்த உதய், அவனின் தோள் மேல் கைப் போட, பட்டென்று அவனின் கையை விலக்கிய ராகவன்,
“மேல கைப் போடாதீங்க மாமா. தள்ளி உட்காருங்க” என்றும் சொல்ல, உதய் மீண்டும் அவனின் தோளில் கைப் போட்டு,
“ம்ம் இன்டரெஸ்டிங். அப்போ மதுமிதாக்கு எங்க மேல தான் ஏதோ கோபம் போல.” என்று நிச்சயமாகச் சொல்ல,
“இல்ல..” வேகமாக மறுத்தான் ராகவன்.
“அப்படியா?” ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டான் உதய்.
“டேய், ராகவ். நான் தினம் கிரிமினல்ஸ் கூடக் குடும்பம் நடத்துறேன் டா. ஒருத்தன் சொன்னதை மட்டுமில்ல, சொல்லாததையும் கணிக்கணும் நான். அதனால, என்கிட்ட கதை விடாத நீ” என்று உதய் அழுத்தமாகச் சொல்ல, மௌனமாய்க் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தான் ராகவன்.
இரண்டு நாட்களாக மதுமிதாவுடன் பேசியவை அவன் கண் முன் வந்து இம்சித்தது.
“ராகவ்வ்வ், இது என்ன பூ? இவ்வளவு அழகா இருக்கு?”
மொட்டை மாடியின் ஒரு பகுதி முழுவதையும் தன் பூக்களால் நிறைத்து பந்தல் அமைத்திருந்த மலரை பார்த்து மதுமிதா ஆச்சரியமாகக் கேட்க,
“அதுக்குப் பேரு க்யின் வெரத் பிளான்ட் (Queen wreath plant)” என்றான் ராகவன். அவனது பார்வையோ தனக்குச் சொந்தமான மலரின் மேல்தான் இருந்தது.
“பர்ப்பிள் கலர் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு ராகவ். பூவும் எப்படிக் கொத்து, கொத்தா பூத்திருக்கு. அதுவும் தரையைப் பார்த்த மாதிரி. வாவ்” அவள் வியந்து சொல்ல,
“ம்ம் வாவ் தான்” என்றவனின் கண்களோ அவள் மேலிருந்தது.
மதுமிதா மெதுவாகப் பின்னே நகர, அவளை விட்டு பார்வையை அகற்றாமல் அவளை நோக்கி நடந்தான் ராகவன். அவள் சுவரில் இடித்து நிற்க, மேலிருந்து விழுந்த பூக்களைச் சோம்பலாக எடுத்து அவளின் கன்னம் உரசி,
“அப்புறம் மது..” என்றான் ராகவன்.
“இது, இது.. யார் வச்சா? இந்தப் பூ?”
“ராகவி கேட்டா, மாமா வாங்கிட்டு வந்து வச்சாங்க.” கிசுகிசுப்பாகச் சொன்னான் அவன்.
“அழகா நேட்சுரலா.. மொட்டை மாடியில பூப் பந்தல்… குடில் அமைச்ச மாதிரி இருக்கு…” அவனது நெருக்கத்தில் தடுமாறியபடி சொன்னாள் அவள்.
“ம்ம்..” என்றவன் மேலும் நெருங்க,
“மயக்க மருந்து நிபுணரை எப்படி மயங்க வைக்க…”
“பேர்லயே போதையை வச்சுட்டு, இந்தக் கேள்வியை நீ கேட்கலாமா மது?” அவன் இதழ்கள், அவளின் காது மடல் உரசி சொல்ல, மதுவின் கரம் உயர்ந்து அவனின் சட்டையைப் பற்றியது.
“இப்படி… பேச கூட உங்களுக்குத் தெரியுமா ராகவ்வ்வ்…”
“எப்படிப் பேச?” அவளின் கன்னத்தில் மீசை உரச அவன் கேட்க, மதுவுக்கு மயக்கம் வந்து விடும் போலிருந்தது.
“உங்களை இவ்வளவு நெருங்கி வர, இப்படி நெருக்கமா நிற்க.. எவ்வளவு நாட்கள்… எத்தனை வருஷம் ஆகி இருக்கு ராகவ்..” என்றவள் இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்பது போல, வேகமாக அவனை இறுக்கமாக அணைத்திருந்தாள்.
“மது…”
“லவ் யூ ராகவ்.” மனம் நெகிழ்ந்து வார்த்தைகள் தாமாக வந்து விழுந்தன.
“மது..” அவள் முகம் பற்றி அவன் குனிய, நேரம் காலம் பார்க்காமல் அவன் அலைபேசி அடித்துத் தொலைத்தது.
அவனை மேலும் இறுகப் பற்றினாள் மதுமிதா. மெதுவாக அவளை விலக்கி, அலைபேசி அழைப்பை ஏற்றுப் பேசினான் ராகவன்.
“பத்து நிமிஷம் கொடுங்க. நான் அங்க இருப்பேன். எஸ். எஸ். கண்டிப்பா. நீங்க ஆபரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க. நான் வந்துட்டே இருக்கேன்.” என்றவன் அங்கு நின்றிருந்த மதுமிதாவை மறந்தவனாக மாடியில் இருந்து கீழிறங்கப் போனான்.
மனம் முழுவதும் ஏமாற்றம் பரவ, “ராகவ்…” என அழைத்தாள் மதுமிதா.
அவள் குரலில் என்ன இருந்தது என்பதை அவன் ஆராயவே இல்லை. ஆராயும் அளவுக்குக் கவனித்திருக்க வேண்டுமே.
“ஓ சாரி மது. ஒரு எமர்ஜென்சி கேஸ் மா. டெலிவரி தான். சிசேரியன். நான் உடனே அங்க இருக்கணும்” தந்தி போலச் சொல்லி, அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கீழிறங்கினான் அவன்.
“வீட்ல இரு. நான் வந்திடுவேன். ஒரு நாலு மணி நேரம் தான். வெயிட் பண்ணுவ தானே?” என்று கேட்டவனை எரித்து விடுவது போலப் பார்த்தாள் மதுமிதா.
“உங்க கூட நானும் வரேன்” என்றாள் அவள்.
“ஹேய், நான் என்ன தியேட்டருக்குப் படம் பார்க்கவா போறேன். ஆபரேஷன் தியேட்டர் போறேன் மா.”
“உங்க கார்ல வெயிட் பண்றேன்” அவள் குரலில் இருந்த வேறுபாட்டை அப்போதுதான் கவனித்தவனாக, அவள் முகம் பார்த்து, “சரி வா” என்று காரை நோக்கி நடந்தான் ராகவன்.
பத்து நிமிட பயணத் தூரத்தில் பத்திற்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு விட்டாள் மதுமிதா. பதில் சொல்வதற்குள் திணறிப் போனான் ராகவன்.
“உங்களுக்கு இப்படித்தான் அடிக்கடி கால் வருமா?”
“எந்த ஹாஸ்பிட்டல்ல இருந்தும் கூப்பிடுவாங்களா?”
“முடியாது சொல்லாம, உடனே கிளம்பி ஓடுவீங்களா?”
அடுக்கடுக்காக அவள் கேட்ட கேள்விக்கு, “மதுமிதா” ஒற்றை வாரத்தையில் அடக்க முயன்றான் அவன்.
ஆனால், அவள் தொடர்ந்தாள்.
“நீங்க கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல தானே வேலைப் பார்க்கிறீங்க? அப்புறம் ஏன் பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு அனஸ்தீசியா கொடுக்கப் போறீங்க?”
“இங்க மயக்கவியல் டாக்டர்ஸ் ரொம்பக் கம்மி மது. நாங்க கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் வேலை முடிஞ்சதும், தனியார் ஹாஸ்பிட்டல்ல நடக்கற ஆபரேஷன்ஸ் அட்டென்ட் பண்ணலாம். நம்ம கவர்மென்ட் அதுக்கு எதுவும் ரெஸ்ட்ரிக்ட்ஷன் போடல மது” பொறுமையாக விளக்கினான் அவன்.
“ம்ம். ஆனா, நீங்களேதான் போய் ஆகணுமா? வேற டாக்டர்ஸ் பார்க்க மாட்டாங்களா?”
“என்ன கேள்வி இது மது? உயிரோட இருக்க ஒருத்தரை மருந்துக் கொடுத்து மயக்கமடைய வைக்கணும். அவ்வளவு ஈஸி கிடையாது. நிறைய விஷயங்கள் கவனிக்கனும், பிளஸ் அவங்களோட மெடிக்கல் ஹிஸ்டரி பார்க்கணும். சும்மா ஒரு இஞ்செக்சன் போட்டு தூங்க வைக்கறது இல்ல மது அனஸ்தீசியா.” என்றவன்,
“ஜெனரல் அனஸ்தீசியா, பொதுவா பெரிய பெரிய சர்ஜரிக்கு முழு உடலையும் மயக்கத்தில் வைக்கறதுக்குக் கொடுக்கறது. நினைவு, உணர்வு, வலின்னு எதுவுமே இருக்காது மது. இதயம், வயிறு, மூளை சம்மந்தப்பட்ட பெரிய சர்ஜரில, நேரம் அதிகம் எடுக்கற சர்ஜரில எல்லாம் ஜெனரல் அனஸ்தீசியா தான் கொடுக்கப்படுது.
அடுத்தது ரீஜினல் அனஸ்தீசியா. உடம்புல குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் மரத்துப் போக வைக்கறது.
இதுலயும் ஸ்பைனல், எப்பிடூரல்னு ரெண்டு டைப் இருக்கு. ரெண்டுமே முதுகில் போடப்படுறது. இடுப்புக்கு கீழ மரத்துப் போகச் செய்யறதுக்குப் பொதுவா கொடுப்போம். சிசேரியனுக்குக் கொடுக்கறது இந்த
அனஸ்தீசியா தான். இதுல நோயாளி நினைவோடுதான் இருப்பாங்க மது. வலி மட்டும்தான் இருக்காது. பேசுறது எல்லாம் கேட்க முடியும் அவங்களால..
அப்புறம், லோக்கல் அனஸ்தீசியா, இது மைனர் சர்ஜரி, பல் பிடுங்க, சின்னதா ஏதாவது அடிபட்டு அந்த இடத்தில் தையல் போட, பயாப்ஸி எடுக்க இது போல நேரங்கள்ல கை, கால் விரல், தோல்னு அந்த ஒரு இடம் மட்டும் வலியில்லாம, மரத்துப் போகக் கொடுப்போம்.” காரை லாவகமாகச் செலுத்திக் கொண்டே, தன் வேலையை அவளுக்குப் புரிய வைத்து விடும் வேகத்தில் விலாவரியாக விளக்கி, அவளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தான் ராகவன்.